fbpx

திருவண்ணாமலை கிரிவல ரகசியம்

திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள சுக்சுமங்களும் அதனால் கிடைக்கும் அளப்பெரிய பலன்களும், வாழ்வில் அவசியம் ஒரு தடவையேனும் சென்று கிரிவலம் செய்து வாருங்கள். சிவத்தை உணருங்கள்.

எங்காவது துவங்கி,எப்படியாவது
முடிக்ககூடாது.மலையை சுற்றி 14 கி.மீ.
பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும்.

வாகனங்களில் செல்லுதல் கூடாது.. இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும்.

மலைசுற்றும் போது கைகளை
வீசிக்கொண்டும், பேசிக்கொண்டும் நடக்க கூடாது. சாதாரணமாக நமச்சிவாய நாமத்தை உச்சரித்துக்கொண்டு நடந்து செல்லவேண்டும்.

இந்த மலையை அங்கப்பிரதட்சணம் செய்த காலங்களும் உண்டு. இப்போதும் பலரும் அங்கப்பிரதட்சணம் செய்வதுண்டு.

அது சாத்தியமில்லாது போது நடந்து
சென்றாலே போதும். எல்லா மாதங்களும் கிரி வலத்திற்கு ஏற்ற மாதங்களான போதும் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, பெளர்ணமி
காலங்கள் மலை வலத்திற்கு ஏற்ற
காலங்களும்,மாதங்களும்கும்
மலை வலம் வரும்போது அருணாசலேஸ்வரின் கிழக்கு கோபுரத்தில் துவக்கி முடிக்கும் போது அருணாசலேஸ்வரரை வணங்கினால்
தான் மலைவலம் முடித்தாக அர்த்தம்.

அருணாசலேஸ்வரரின் கிழக்கு வாயிலில் இருந்து மலை வலம் வர ஆரம்பிக்க வேண்டும்.

மலையின் எட்டு திசைகளிலும் தன்
பாவங்களை போக்குவதற்காக அஷ்டதிக்கு பாலகர்களில் கிழக்கு அதிபதியான இந்திரன் வழிபட்ட இந்திரலிங்கத்தை வழிபடவேண்டும். பிறகு மலை சுற்றும் சாலையில் நந்திகேசுவரர் சன்னதி உண்டு.

இங்கு வணங்கி வழிபட்டு தான் மலைவலம் வரவேண்டும். ஏனெனில் மலை சுற்றுகையில் நமக்கு சிவன் அளித்த அதிகார மூர்த்தி அவர்.

அடுத்து தென்கிழக்கு திசைக்கு அதிபதி அக்னி பூஜை செய்த அக்னி லிங்கம் உள்ளது. இதன் அருகில் சிம்ம தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தின் கரையில் அரிச்சந்திர மகாராஜாவின் சிலை ஒன்றும் உள்ளது. அதன் வழியே சென்றால் பிருங்கி மகரிஷி முனிவரின் வழிபாட்டு தலம் உள்ளது.

அடுத்து தெற்கு திசைக்கு அதிபதி எமன் பூஜை செய்து வழிப்பட்ட எமலிங்கம் உள்ளது. எமன் கட்டளை நிறைவேற்றும் கின்னர் முதலானோர் இங்கிருந்து தான் புறப்பட்டு செல்லுகின்றனர் என்ற ஐதீகம் உள்ளது. இங்கு தியானம் செய்தால் நம்மிடையே உள்ள தீய எண்ணங்கள் மறையும் நினைக்கின்ற செயல்கள் நிறைவேறும்.

அடுத்து மகாசக்தி மாரியம்மன் கோயில்
உள்ளது. இந்த கோயிலில் மஞ்சள் கயிற்றில் தொட்டில் செய்து அங்குள்ள மரத்தில் தொங்குவதை காணலாம். இந்த மரத்தில் அங்ஙனம் கட்டினால் குழந்தை வரம் அளிப்பதாக கூறப்படுகிறது.

தென்மேற்கு திசைக்கு அதிபதியான நிருதி சிவனை வழிப்பட்ட நிருதி லிங்கம் உள்ளது.

இங்கு வணங்கிய பின்பு தெற்கிலிருந்து
மேற்கில் திரும்பும் வளைவில் நின்று
மலையை பார்க்க வேண்டும்.இந்த இடம்
பார்வதி தேவிக்கு ரிஷப வாகனத்தில்
சிவபெருமான காட்சி அளித்த இடம். ஆதலால் இங்கு மலையின் முகப்பில் நந்தியின் தலை திரும்பி நம்மை பார்ப்பது போல் இருக்கும். அதை வணங்கி செல்ல வேண்டும்.

அடுத்து அருணாசலேஸ்வரின் கோயிலுக்கு நேர் எதிரில் திருநேர் அண்ணாமலை கோயில் உண்டு. இங்கு உண்ணாமுலை அம்மன் தீர்த்தம் அருகிலேயே உள்ளது. ஆஞ்சனேயர் சன்னதி, ராகவேந்திராலயம், முருகன் ஆலயம் உள்ளது. இங்குள்ள முருகன் சிலை பழநி மலை சித்தர் போகரால் நிர்மாணிக்கப்பட்டது.

பழநியில் நவபாஷாண சிலை அமைத்த போகர் இங்கு மூலிகைகளால் சிலை அமைத்தார். (இந்த சிலை நவாப்புகள் காலத்தில் திருட்டு போய்விட்டது)

அடுத்து இராஜராஜேஸ்வரி ஆலயம் புதுப்பித்து புத்தொளியுடன் இருக்கிறது.
இராஜராஜேஸ்வரி ஆலயத்திற்கு நேர் எதிரில் மலை அடிவாரத்தில் கண்ணப்பர் கோயில் அமைதியான சூழ்நிலையில் குளிர் மரங்களுக்கு இடையில் இருக்கிறது.

தியானத்திற்கு ஏற்ற இடம்.சாதுக்களும்,
ஆங்கிலேயரும் இங்கு தியானத்தில்
அமர்ந்திருப்பதைக் காணலாம்.

இராஜராஜேஸ்வரி லயம் அடுத்து, கவுதம மகரிஷி கோயில் இருக்கிறது. கவுதம மகரிஷி இங்கு வந்து வழிபாடும், நிஷ்டையிலும் இருந்ததாக சொல்லப்படுகிறது.

அடுத்து சூரியன் வழிபட்ட லிங்கம். மேற்கு திசைக்கு அதிபரான வருணன் வழிபட்ட லிங்கம் உள்ளது.

அதன் பிறகு பிரம்மன் வழிபாடு செய்து
பாவங்களை போக்கி கொண்ட திரு
அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலை அடி அண்ணாமலையார் என்று அழைப்பர். அருகில் மாணிக்கவாசகர் கோயில் உள்ளது. அகஸ்தியர் குளம்
உள்ளது.

அதற்கடுத்து வடமேற்கு திசைக்கு
அதிபதியான வாயு லிங்கம் உள்ளது. சிறிது தூரம் சென்றால் வட திசைக்கு அதிபதியான குபேரன் வழிபட்ட குபேரன் லிங்கம் உண்டு.

அடுத்து இடுக்கி பிள்ளையார் கோயில்
உள்ளது.இதனை கோயில் என்று சொல்லுவதை விட சுளுக்கும், உடல் வலி தீர்க்கும் இடம் எனலாம்.

முன்காலத்தில் கடவுளின் பெயரை கூறி பக்தியும், ஒழுக்கத்தினை வளர்த்தார்கள். அதே போல் இதுவும் ஒன்று. இந்த கோயிலில் நுழைத்து ஒருக்களித்து வெளியே வரவேண்டும். ஒரு அடி அகலத்தில் உடம்பை ஒருகளித்த படி வரவேண்டும். அப்படி இல்லை என்றால் உடம்பு சிக்கி கொள்ளும். அதிலிருந்து விடுபடுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.. அப்போது உடம்பில் ஏதாவது சுளுக்கு, வலி இருந்தால் விலகிவிடும்.

ஆனால், உடம்பு மாட்டிக் கொள்ளாமல்
வெளியே வரவேண்டும் என்ற் எண்ணத்தில் அங்குள்ள பிள்ளையாரை தரிசிக்க எண்ணம் வருவதில்லை. அதனால் தான் பஞ்சபூதங்களையும் அடக்கினால் தான் வாழ்வில் உயர்வடைய முடியும் என்ற ஒப்பற்ற தத்துவத்தை இடுக்கு பிள்ளையார் காட்டுகிறார்.

இங்கிருந்து மலையை பார்த்தால் ஐந்து
முகங்கள் தெரியும்.இது சிவனின் ஐந்து
திருமுகங்களை குறிக்கக்கூடியது. அடுத்து மலை வல பாதையில் இருந்து சுடுகாட்டுக்கு பிரியும் தனிப் பாதையில் சென்றால் வட கிழக்கு அதிபாரான ஈசானன் வழிபட்ட ஈசான லிங்கம் உள்ளது.

இதனையும் வழிபட்டு அதன் பிறகு அருணாசலேஸ்வரர் கோயில் சென்று
தரிசித்த பிறகுதான் மலைவலம் பூர்ணத்துவம் அடைகிறது.

எல்லா தீர்த்தங்களிலும் ஒவ்வொரு சிறப்பு உண்டு என்றாலும், துர்கையம்மன் கோயிலுக்குள் கட்க தீர்த்தம் மிகச்சிறந்த தீர்த்தமாக போற்றப்படுகிறது.

மகிடாசுரனை வதம் செய்த பார்வதிதேவியின் பாபம் போக்குவதற்கு துர்க்கையம்மன் வாள் (கட்கம் என்றால் வாள்) வீசி தோற்றுவித்தது.

மலை வலம்.

மலை வலம் வர சிறந்த, சிறப்பான நாள்
புராண காலத்தில் பார்வதி தேவியார் சிவனின் இடப்பாகம் பெற வேண்டும் என்பதற்காக கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் விழா எடுத்து மலையை வலம் வந்தார். அப்போதுதான் சிவன் காட்சி தந்து உமையாளுக்கு இடப்பாகம் அளித்தார் என்பது வரலாறு. சித்தர்கள், ஞானிகள் ஆகியோர் ஒவ்வொரு மாதப்பிறப்பு மற்றும் பிரதோஷ காலத்தில் மலை வலம் வந்தனர்.

அதன் பின்னர் பெளர்ணமி அன்று மலைவலம் வர ஆரம்பித்தார்கள்.

சந்திரன் நம் மனத்துக்கு (எண்ணத்திற்கும்) காரகன். அன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகளவில் பெற்று பூர்ண நிலவாக சந்திரன் நிறைந்த உயிர்களை தருகிறார். இதனால் பெளர்ணமி மலை வலம் வருவது சாலச்சிறந்தது என பெரியோர்களால் போற்றப்பட்டது.

மனோன்மணியான சக்தி சிவனுடன் இரண்டற கலக்கும் இந்த நாளில் வழிபடும் பக்தர்களுக்கு விசேஷ சக்திகளை வழங்குகிறது என முனிவர்கள் கூறுகின்றனர்.

இதை விஞ்ஞானமும் உறுதிபடுத்துகிறது. இதை விட அதிசூட்சம் நாளாக வியாதீபாத யோக நாள் அன்று மலை வலம் வந்தால் நினைத்த காரியம் சித்தி அடையும் என்று என் நண்பர் கோயில் பிரதம குருக்கள் ரமேஷ் சிவாச்சாரியார் அடிக்கடி கூறுகின்றனர்.

செவ்வாய் சிறப்பு:-

சிவன் கோயில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமையாக இருக்கும். ஆனால், திருஅண்ணாமலை அக்னிமலை. இதனால் தான் அருணாசலம் என்ற பெயரும் உண்டு. அருணம் என்றால் சிவப்பு என்று பொருள். இந்த கோயில் அக்னி
கோயில். அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை.

அக்னிக்குரிய கிரகம் அங்காரன் அவருக்காகவே இந்த கோயிலில் மட்டுமே சிவ பெருமானுக்கு செவ்வாய்கிழமை அன்று விசேஷ வழிபாடு நடக்கும். அதுபோலவே செவ்வாய்க்கிழமை அன்று வழிபடுவோர் பிறவி பிணியிலிருந்து விடுபடலாம் என்று புராணங்கள் கூறுகிறது.

மலை வலத்தினால் கிடைக்கும் நன்மைகள்:-

ஆயுளைக்கூட்டும் ஆற்றல் கொண்டது
திருக்கடையூர். சனித்தொல்லையில் இருந்து விடுப்பது திருநள்ளாறு. நோய்களில் இருந்து நம்மை காப்பது வைத்தீஸ்வரன் கோயில். அது போல் ஊழ்வினைகளை நீக்கக்கூடியது அண்ணாமலையார் கோயில்.

பிறவிப்பிணி நீங்க வேண்டும் என விரும்பும் எவரும் மலை வலம் வருவதால் தத்தம் கர்மாவை குறைத்து கொள்ள முடியும்.

அண்ணாமலையை சுற்றி வருவது சம்சாரக்கடலை கடக்கும் தெப்பமாக
அமையும். அதுபோல் ஏழு நகரங்களையும் கடந்து முக்தி அடையும் ஏணியம்மன் கோயிக்குள் கட்க தீர்த்தம் மிகச்சிறந்த தீர்த்தமாக போற்றப்படுகிறது.

மகிடாசுரனை வதம் செய்த பார்வதி தேவியின் பாபம் போக்குவதற்கு துர்க்கையம்மன் வாள் வீசி
தோற்றுவித்தது.

மலை சுற்றி வரவேண்டும் என நினைத்து ஓரடி எடுத்து வைப்பவர்களுக்கு ஒரு யாகம்
செய்த பலன் கிடைக்கும்.

இரண்டாம் அடி எடுத்து வைத்தால் ராஜசுய யாகம் செய்த பலன் கிடைக்கும்.

மூன்றடி எடுத்து வைத்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

நான்காவது அடி எடுத்து வைத்தால் எல்லா யாகங்களும் பலன் கிடைக்கும்.

நினைப்பவர்களுக்கே இந்த பலன்
என்றால் மலை சுற்றுபவர்களுக்கு கிடைக்கும் பலன் கைலாசத்திற்குள், நுழைந்து பிறப்பு இறப்பாகிய பிணி நீங்கி உயர் பதவி கிடைக்கபெறுவார்கள் என்று அருணாசல புராணம் தெரிவிக்கிறது.

நம்பிக்கைதான் வாழ்க்கை. இன்று படுக்கும் போது நாளை காலையில் எழுந்து விடுவோம் என்ற திட நம்பிக்கையில்தான் துயில் கொள்கிறோம்.

நம்பிக்கைதான் நமது உயிர் மூச்சு. நம்பிக்கையால்தான் எல்லாவற்றியும்
சாதிக்கிறோம்.நம்பிக்கை இல்லாதவர் இந்த உலகில் வெற்றி பெற முடியாது.
எனவே பூரணமான நம்பிக்கையோடு
தொடங்குங்கள். மலையை சுற்றும் போது சிவலிங்கம், சிவன்,சிவம் என்ற எண்ணத்தோடு வலம் வர தொடங்கினால், நீங்கள் நினைத்த எண்ணங்கள் கண்டிப்பாக நிறைவேறும்.

ஞாயிற்று கிழமை சுற்றினால் சிவபதவி
கிடைக்கும்.

திங்கள் கிழமை சுற்றினால் இந்திர பதவி கிடைக்கும்.

செவ்வாய் கிழமை சுற்றினால் கடன், வறுமை நீங்கும். தொடர்ந்து வரும் ஏழு பிறப்புகளை நீக்கி சுபிட்சும் பெறலாம்.

புதன்கிழமை சுற்றினால் கலைகளில்
தேர்ச்சியும் முக்தியும் கிடைக்கும்.

வியாழக்கிழமை சுற்றினால் ஞானிகளுக்கு ஒப்பான நிலையை அடையலாம்.

வெள்ளிக்கிழமை சுற்றினால் விஷ்ணு பதம் அடையலாம்..

சனிக்கிழமை சுற்றினால் நவக்கிரகங்களை வழிப்பட்டதன் பயன் கிடைக்கும்.

நாற்பத்தெட்டு நாட்கள் அதிகாலையில்
கணவனும், மனைவியும் நீராடி மலைவலம் வந்தால் மகப்பேறு கிடைக்கும்.

அமாவாசை அன்று சுற்றினால் மனதில் உள்ள கவலைகள் போகும். மனம் நிம்மதி அடையும்.

மலை வலம் வரும் போது பக்தர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்
என்பதை அருணாசல புராணத்தில் பிரம்மன் தெரிவிக்கிறார்.

மலை வலம் வரும் பக்தர்கள் அன்றைக்கு பெண்களை நினையாமலும், அவர்களோடு சேராமலும், நீரில் மூழ்கி, தூய்மையான ஆடையை உடுத்திகொண்டு விபூதி
அணிந்து,தானம் தாம் கொடுத்து
ஒருவரிடத்தும் தானம் வாங்காமல் காலினால் நடந்து வரவேண்டும்.

மலையை சுற்றி இருக்கின்ற தேவர்களையும் முனிவர்களையும்
வணங்கி சட்டையும்,போர்வையும் நீக்கி
குடை பிடியாமல், செருப்பு அணிப்பணியாமல், பயம், கோபம், சோகம், இவற்றை நீக்கி குதிரை, யானை இவற்றின் மீது ஏறாமல் தாம்பூலம் தரிக்காமல், சிந்தையை சிவன்பால் செலுத்தி வலம் வரவேண்டும்.

கையை வீசிக்கொண்டு போகாமலும், மனச் சோர்வில்லாமல், ஆர்வத்தோடு கைகளை தலை மேல் குவித்து கொண்டு, உடல் உறுப்பு ஊனம் உற்றவர்களையும் பாராமல், தீயவர்களை கண் எடுத்தும் பாராமல் நடத்தல் வேண்டும். மலை சுற்றப்போகும் பக்தர்களை பரிசோதிக்க
நினைப்பது இறைவனின் தினசரி விளையாட்டு. எனவே இச்சோதனைகளை வென்று மலை வலம் வரவேண்டும்.

சமாதி அடைந்த சித்தர்களின் சக்தி:-

நம் மனதில் கோபம், க்ரோதம், குழப்பம்,
கவலை ஆகியவை எழும் போது நம் உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு மேல் இருக்கும். இதனை பீட்டா அலைகள் என கூறுகின்றனர். நம் ஓய்வெடுக்கும் போது (ஆழ்ந்த தூக்கத்தின் போது) உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும். அந்த அலைகளை ஆல்ஃபா அலைகள் என கூறுகின்றனர். அதே உடல் தியான நிலையில் இருக்கும் போது எட்டு ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும். அதை தீட்டா அலைகள் என்கிறனர் விஞ்ஞானிகள்.

தவ நிலையில் உள்ள சித்தர்களின் உடலில் இருந்து இந்த அலைகள் வெளிப்பட்டு கொண்டே இருக்கும். மிகப் பிரசித்தமான கோயில் சித்தர்கள் சமாதி அடைந்திருக்கும் மர்மம் இதுதான்..

அண்ணாமலையில் வாழ்ந்து முக்தி பெற்ற மகான்கள்:-

குகை நமச்சிவாய தேவர்
குகை நமச்சிவாய சுவாமிகள்
அருணகிரி நாதர்
திருவண்ணாமலை தின நுமுதல் குருமூர்த்தி
தேசிகப் பரமாசாரிய சுவாமி
பாணி பத்திர சுவாமி
அன்னை மங்கையர்க்கரசியார்
சோணாசல் தேவர்
ஞானப்பிரகாசர்
வீர வைராக்கிய மூர்த்தி சுவாமி
அப்பைய தீட்சிதர்
சிவப்பிரகாசர்
ஞானியாரடிகள்
தட்சிணாமூர்த்தி சுவாமி
குமாரசாமி பண்டாரம்
அழியாவிரதம் கொண்ட தம்பிரான்
ஈசானிய ஞான தேசிகர்
சற்குரு சுவாமி
பழனி சுவாமி
அருள்மொழி அம்மணி அம்மாள்
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமி
காரியானூர் நடேச சுவாமி
அங்கப்பிரதட்சணம் அண்ணாமலி சுவாமி
திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமி
சிவா சுவாமி
பத்திராசல சுவாமி
சேஷாத்திரி சுவாமி
ரமண முனிவர்
சடைச்சி அம்மாள்
அழகானந்த அடிகளார்
இரை சுவாமி
இசக்கி சுவாமி
சோனாசல பாரதியார்
யோகி ராம்சுரத் குமார்[விசிறி சாமியார்]

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்:-

ஞானிகள், முனிவர்கள், சித்தர்கள் சிறந்த கோயில்களையும், அதில் தெய்வ திருவுருவச் சிலைகளையும் ஏற்படுத்தும் முறைகளை வகுத்து கொடுத்து கோயில் திசை நான்கிலும் விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் அமைப்பை ஏற்படுத்தி கொடுத்தார்கள்.

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க
வேண்டாம். ஆலயம் தொழுவது சாலவும் நன்றே என்ற முன்னோர்களின் பொன் மொழிகள் இதன் பயன் கருதி கூறியவை.
ஆகம விதிப்படி கோயில் நிர்மாணித்து, அபிஷேகிக்கப்பட்டு, காலம் தவறாது புணர் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்து கொண்டிருக்கிற கோயில்களில் உள்ள கோபுங்ரகளின் மேல் தங்கத்தாலும், செம்பினாலும் செய்யப்பட்ட கலசங்கள் தனது கூரிய முனை வழியாக காயத்தில் உள்ள உயிர் சக்தி என்று அழைக்கப்படும் பிராண சக்தியை கிரகித்து வெளிவிடுகிறது.

அந்த சக்தியை நம் உடல் பெறுவதால் புத்துணர்ச்சி, புது உணர்வு, உள்ளத் தூய்மை, ஆன்மீக ஈர்ப்பு, நோயின்மை, நோய் எதிர்ப்பு சக்தி அடைகிறோம்.

இதனால் தான் கோபுர தரிசனம் கோடி
புண்ணியம் என்று முன்னோர்கள் கூறினர்.

கர்ப்பக்கிரக கோபுரத்தின் மேல்
வைக்கப்பட்டுள்ள கலசங்கள் அதே போல் பிராண சக்தியை கிரகித்து கலசத்தின் நேர் கீழே உள்ள இறை பீடத்திற்கு இடையறாது அனுப்பி கொண்டிருக்கிறது. இந்த சக்தி பீடத்தின் அடியில் உள்ள தங்கத்தாலும், வெள்ளியினாலும் செய்யப்பட்ட மந்திர சக்கரங்கள், யந்திரங்கள் தன்பால் இழுத்து தான் அமையப் பெற்றிருக்கும் தன்மைக்கு ஏற்ப பீடத்தின் மேல் தன் சக்தியை வெளிப்படுத்துகிறது.

இந்த பிராண சக்தியின் அளவை மேலை நாட்டு விஞ்ஞானி போவிஸ் கண்டு பிடித்துள்ளார்.

இதிலிருந்து வெளிப்படும் சக்தியை (14 ஆயிரம் போவிஸ்) நம் உடலில் உள்ள உயிர் அணுக்கள் தாங்க இயலாது. எனவே தான் பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலை அந்த சக்தியை பிரித்து ஒன்பது முனைகள் வழியாக வெளியேற செய்கிறது.

அந்த சக்தி கர்ப்பக்கிரத்தின் வாயில் வழியாக வெளியே வருகிறது. அங்கு இறைவனை வணங்கி கொண்டுள்ள நம் மீது படுகிறது. இதனால் ஆன்மீக உணர்வு, சக்தி நம்மீது பரவி மனதில் உள்ள கவலைகள், குடும்பத்தில் உள்ள பிரச்னைகள்,உடல் நோய்கள் அனைத்தையும் போக்கி னந்தத்தை
கொடுக்கிறது.

கர்ப்பக்கிரத்தில் கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் நீர் செல்லும் பொருட்டு ஓர் துவாரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த துவாரத்தின் வழியே செல்கின்ற நீரிலும் கலந்து பிராண சக்தி வெளிப்படுகிறது.

அங்கு அமைக்கப்பட்டுள்ள சதுர வடிவ
தொட்டியில் விழும் நீரை கோயிலை வலம் வரும் நாம் அந்த இடத்தில் வந்தவுடன் எடுத்து கண்ணிலும் சிரசிலும் ஒற்றிக் கொள்கிறோம். அந்த சில நிமிடங்களில் நம் மீதும் பிராணசக்தி பரகிறது. இந்த பிராணசக்தி வெளிப்பட்டு கொண்டு இருப்பதால் தான் சிலையின் குறுக்கே செல்லக்கூடாது..

சிலையின் பக்கவாட்டில் தான் செல்ல
வேண்டும். சிலையை விட்டு விலகி
நிற்பதுடன், அபிஷேகம் செய்யும் போது
கைகள் சிலைக்கு மேல் செல்லக்கூடாது. ஒரு காலை வெளியிலும், மறு காலை
கர்ப்பக்கிரகத்தின் வாயிலிலும்
வைக்ககூடாது.

கர்ப்பக்கிரகத்திற்குள் இரும்பாலான எந்த பொருளையும் பயன்படுத்த கூடாது என முன்னோர்கள் விஞ்ஞானத்தின் அடிப்படையில் தான் கூறியுள்ளனர்.

மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது!

திருவண்ணாமலையை கிரிவலம் வரும்போது திடீரென்று மழை வந்தால், மழைக்கு ஒதுங்கக்கூடாது. அதற்கு புராணம் கூறும் காரணம் இது:

மனிதனாலோ, மிருகத்தாலோ, பகலிலோ, இரவிலோ சாகாத வரம் பெற்ற இரணியன் மேலும் வரம்பெறும் பொருட்டு மனைவி லீலாவதிக்குத் தெரியாமல் தவம் புரியச் சென்றான்.

அவன் தவம் புரியும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு புனிதத்
தலமாகத் தேடினாள் லீலாவதி.

அப்போது அவள் மூன்று மாத கர்ப்பிணி. அவள் நிலை அறிந்து நாரதர், “திருவண்ணாமலை திருத்தலம் சென்று காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் வந்தால் உனக்கு நல்வழி கிட்டும்!” என்று கூறி, காயத்ரி மந்திரத்தை அவளுக்கு உபதேசித்தார்.

அதன்படி திருவண்ணாமலையில் காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி அவள் கிரிவலம் வருகையில், திடீரென்று அமுத புஷ்பமழை பொழியத் தொடங்கியது.

பூமியில் நடக்கும் அக்கிரமச் செயல்கள்
அனைத்தையும் பூமாதேவி மிக்க பொறுமையுடன் தாங்குகிறாள். அப்படிப்பட்ட பூமாதேவியைச் சாந்தப்படுத்த இப்படிப்பட்ட மழை பொழியுமாம். இந்த மழைப்பொழிவு
இறைத்தன்மையுடையது. ஒரு கோடி மழைத் துளிகளுக்குப்பின் அமுதத் துளி ஒன்று கீழே இறங்கும். இந்தத் துளி எங்கு விழுகிறதோ, அங்கு மக்கள் நோய் நொடியின்றி வாழ்வர். விவசாயம் செழித்து வளரும். அமைதி நிலவும். அது மட்டுமின்றி, அங்கு “அமுத புஷ்பமூலிகை” என்கிற அரிய வகை தாவரம் தோன்றும்.

மழைத்துளிகள் கனமாக விழவே, பாறை ஒன்றின் ஓரத்தில் ஒதுங்கினாள் லீலாவதி. எனினும், விடாமல் காயத்ரி மந்திரம் ஜெபித்தாள். அப்போது, விழுந்த அமுதத் துளி பாறையில் பட்டு, அதில் அணுவளவு அவளின் கர்ப்பப் பையையும் அடைந்தது. அதைக் கருவிலிருக்கும் பிரகலாதன் உண்டான். அந்தப் பாறையில் அமுத புஷ்ப மூலிகை தோன்றியது.

அப்போது கிரிவலம் வந்த சித்தர் பெருமக்கள் இந்தக் காட்சியைக் கண்டனர். உரிய மந்திரம் சொல்லி, அந்த மூலிகையைப் பறித்த சித்தர்கள், காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் லீலாவதியிடம் ஆசி கூறி கொடுத்தார்கள்.

அவள் வயிற்றில் வளரும் சிசு மூலம் மகாவிஷ்ணு புது அவதாரம் எடுக்க
இருப்பதை அவர்கள் உணர்ந்தனர்.

அந்த மூலிகையைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டாள் லீலாவதி. அதனால் அந்த மூலிகையின் சக்தி கருவை அடைந்தது. அதுதான் பின்னாளில் ஸ்ரீநரசிம்மரின் உக்கிரத்தைத் தாங்கும் சக்தியை
பிரகலாதனுக்கு வழங்கியது.

மழையும் வெயிலும் சேர்ந்து வரும்போது ஸ்ரீலட்சுமி நரசிம்மர் துதிகளை ஜெபித்தால் நமது வீட்டில் செல்வமழை பொழியுமாம்.

மழை பொழியாவிட்டாலும் மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் வந்தால் நற்பலன்கள் ஏற்படும். தகுந்த குருவிடம் மந்திர உபதேசம் பெற்றே காயத்ரியை ஜெபிக்க வேண்டும் என்பது விதி.

சாபங்கள் நீங்கிட உதவும் அன்னதானமும் ஓம்-சிவசிவ-ஓம் மந்திரஜபமும்!!!

அண்ணாமலையில் நாம் எந்த நாளிலும், எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும் அண்ணாமலை செல்லலாம்; அப்படி நாம் செல்லும்போது, நம்முடன் நமது முந்தைய மனிதப்பிறவிகளும் நம்முடன் கிரிவலம் வரும்= இந்த தெய்வீக உண்மையை நமக்குக் கண்டறிந்து சொன்னவர் சித்தர்களின் தலைவர் அகத்தியர் ஆவார்.

அண்ணாமலைக்குச் சென்று கிரிவலம்
செல்லும்போது, இரு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சத்தை வைத்துக்கொண்டு,
மனதுக்குள் “ஓம் சிவ சிவ ஓம்” என்று
ஜபித்துக்கொண்டே செல்ல வேண்டும்.

அவ்வாறு கிரிவலம் செல்லும்போது, ஒவ்வொரு லிங்கத்தின் வாசலிலும் ஒருவருக்கு மட்டுமாவது குறைந்தது அன்னதானம் செய்ய வேண்டும்.

வசதியிருந்தால் குறைந்தது ஒன்பது பேர்களுக்கு அன்னதானம் செய்யலாம்;

இவ்வாறு 14 கிலோ மீட்டர் தூரத்தையும்
கடந்தால் அதனால் நமது எப்பேற்பட்ட கடுமையான கர்மவினைகள் தீரும். இது அகத்தியர் வாக்கு.

கிரிவலம் முடித்த பின்னர், கட்டாயமாக அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வேண்டும். (கிரிவலம் புறப்படும்போது, அண்ணாமலையாரை கோயிலுக்குள் சென்று தரிசிக்க வேண்டியதில்லை)

(நள்ளிரவில் கிரிவலம் முடித்தவர்கள், மறு நாள் காலையில் அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும்)

இப்படி மாதம் ஒருமுறை வீதம் குறைந்தது 1 ஆண்டு வரையிலும், அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரையிலும் அண்ணாமலையில் அன்னதானம் செய்து கொண்டே கிரிவலம் செல்ல வேண்டும்; அப்படி கிரிவலம் செல்லும்போது “ஓம் சிவ சிவ ஓம்” ஜபிக்க வேண்டும்.இவ்வாறு செய்ததன் மூலமாக எனக்கு பலவிதமான பிரச்னைகள் முழுமையாக தீர்ந்திருக்கின்றன;

(குறிப்பாக அன்னதானத்துடன் கூடிய
கிரிவலம் செல்வதை ஒரு தமிழ் வருடத்தில் மூன்று அமாவாசைகளில் செய்வதை வழக்கமாக்கியிருக்கிறேன். ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை. இந்த மூன்று அமாவாசைகளுமே அதி முக்கியத்துவம் வாய்ந்தவை; முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்ய கடலோரம் அல்லது நதிக்கரையோரம் செல்ல வேண்டும். என்பது இந்து சாஸ்திர விதியாக
இருக்கிறது. அண்ணாமலையானது சோண நதியின் மீது அமைந்திருக்கிறதே! எல்லாம்
எனது அப்பா அருணாச்சலத்தின்
ஆசிர்வாதத்தால் இவ்வாறு செய்ய
முடிந்திருக்கிறது. நீங்களும் இவ்வாறு செய்து பார்க்கலாமே!!!)

இதை படித்த பிறகு நீங்கள் எங்கிருந்தாலும் சரி… ஒரே ஒரு சங்கல்பம் எடுங்கள் இந்த வினாடி… அண்ணாமலையை நாம் இறப்பதட்குள் ஒரு தடவையாவது கிரிவலம் வர வேண்டும் என்று…. அண்ணாமலையானிடம் கேளுங்கள்…. அவன் உங்களை அழைப்பான்….

அவன் அருளாலே தான் அவனை வணங்க முடியும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram