fbpx

மைசூர் சாமுண்டிஸ்வரி அம்மன் தரிசனம்

இந்தக் கோவில் கிபி 12ஆம் நூற்றாண்டில் ஹோய்சாள மன்னரால் கட்டப்பட்டது. ஆனால் கோவில் கோபுரங்கள் விஜயநகர மன்னர்களால் கிபி 17ம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்டது.

முன்னொரு காலத்தில் மைசூர் நகரமானது மகிஷாசூரன் என்ற அரக்க மன்னனால் ஆளப்பட்டது. இவனது பெயரிலுள்ள மகிஷா என்ற வார்த்தை காலப்போக்கில் மருவி மைசூர் என்று தற்போது அழைக்கப்பட்டு வருகிறது. பெண் தெய்வமான சாமுண்டீஸ்வரி, மகிஷாசுரனை வதம் செய்து அந்த ஊர் மக்களை அரக்கனிடம் இருந்து காப்பாற்றியதால், காவல் தெய்வமாக மைசூர் நகரத்திலேயே தங்கிவிட்டாள் என்கிறது வரலாறு.

ஆக்ரோஷத்துடன் மகிஷாசுரனை வதம் செய்த சாமுண்டீஸ்வரியை தேவர்கள் சாந்தப்படுத்தினார் சாமுண்டீஸ்வரியின் உருவத்தை மார்க்கண்டேய மகரிஷி எட்டு கரங்களுடன் வடிவமைத்து அன்னையின் திருவுருவத்தை மலைப்பகுதியில் அமைத்தார். இந்த கோலத்தில் தான் இன்றும்கூட சாமுண்டீஸ்வரி அனைவருக்கும் காட்சி தருகிறாள்

தல வரலாறு

மகிஷாசூரன் சிவனிடமிருந்து பெற்ற வரம்

சிவன் அளித்த வரங்கள் எல்லாம், தீமையை எண்ணி வரம் வாங்குபவர்களுக்கு அழிவு நிச்சயம் என்பதைக் நமக்கு கூறுகின்றது. அந்த வகையில் மகிஷாசூரன் என்ற அரக்கன் சிவபெருமானை நோக்கி ஒரு தவத்தை மேற்கொண்டான். அந்த தவத்தில் மயங்கிய சிவன், என்ன வரம் வேண்டும் என்று கேட்க, அதற்கு மகிஷாசுரன் ‘சாகாவரம் வேண்டும்’ என்று தன் வேண்டுதலை வைத்தான். ஆனால் சிவனோ ஆண்கள், விலங்குகள், ஜலம் இதன் மூலம் மரணம் ஏற்படாது என்று வரமளித்தார். இதற்கு என்ன அர்த்தம். இது மூன்றும் இல்லாத ஒன்றால் அவன் வதம் செய்யப் போவது நிச்சயம் என்பது நமக்கு புரிகிறது.

வரத்தைப் பெற்றுக் கொண்ட மகிஷாசூரனின் அட்டகாசம் தாங்கவில்லை. மரணமில்லை என்ற காரணத்தால் அவன் செய்த அட்டூழியங்களை யாராலும் அடக்க முடியவில்லை. தேவர்களை எல்லாம் வதைத்துக் கொண்டிருந்தான். தேவர்கள் சிவனிடம் தங்களை காப்பாற்ற வேண்டும் என்று முறையிட்டனர். ஆனால் வரம் வழங்கிய சிவனால் மகிஷாசூரனை எப்படி அழிக்க முடியும்?

மகிஷாசூரனுக்கு அளித்த வரம் என்ன என்பதை தேவர்களுக்கு சிவபெருமான் விளக்கினார். மகிஷாசுரனை ஆண்கள், விலங்குகள், நீர் இவைகளால் மட்டும் தான் மரணம் ஏற்படாது. ஆனால் ஒரு பெண்ணின் மூலம் அவனை அழிக்க முடியும் என்று ஒரு வழியை கூறுகின்றார். அடுத்தபடியாக தேவர்கள் பார்வதி தேவியை நாடினர். பார்வதிதேவியும் அவர்களது வேண்டுதலை ஏற்று சாமுண்டீஸ்வரி அவதாரத்தை எடுத்து, ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக் கிழமை அன்று மைசூரில் அவதரித்தாள்.

முப்பெரும் தேவிகளின் ஆசியைப் பெற்று சாமுண்டீஸ்வரி மகிஷாசுரனுடன் போர் செய்து அவனை வதம் செய்தாள்.

பலன்கள்

சாமுண்டீஸ்வரி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அம்பிகையை நினைத்து, தனது வேண்டுதல்களை உண்மையான பக்தியோடு, அடுத்தவர்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் வேண்டும் வேண்டுதல் எதுவாக இருந்தாலும் நிறைவேற்றப்படும்.

கர்நாடகத்தில் மன்னர்கள் ஆண்ட காலத்திலும், தற்போது மக்களாட்சி காலத்திலும், ஆட்சி செய்பவர்கள் சாமுண்டீஸ்வரி ஆசியை பெறாமல் ஆட்சியை நடத்த மாட்டார்கள்.

செல்லும் வழி

கர்நாடக மாநிலத்தில் மைசூர் நகரத்தில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சாமுண்டீஸ்வரி கோவில்.

தரிசன நேரம்:
காலை 7.30AM – 9PM

முகவரி:
ஸ்ரீ சாமுண்டீஸ்வரி கோவில்,
சாமுண்டி மலை ரோடு,
மைசூர் 570010,
கர்நாடகா,
இந்தியா.
தொலைபேசி எண்
+91-0821 259 0027, 0821 259 0127.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram