கட்டுரை ஆசிரியர் – சுரேஷ்குமார்

சேக்கிழார் பெருமான் தனது பெரிய புராணத்தில் கூறியுள்ள 13 சருக்கங்களில் 8வது சருக்கமான
பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் பற்றி இனி காண்போம்
இந்த சருக்கத்தில்
1. பொய்யடிமை யில்லாத புலவர் புராணம்
2.புகழ்ச் சோழ நாயனார் புராணம்
3.நரசிங்க முனையரைய நாயனார் புராணம்
4.அதிபத்த நாயனார் புராணம்
5.கலிக்கம்ப நாயனார் புராணம்
6.கலிய நாயனார் புராணம்
7.சத்தி நாயனார் புராணம்
8.ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்
பற்றி இனி காண்போம்
பொய்யடிமை இல்லாத புலவர்
பொய்யடிமை இல்லாத புலவர்கள் தில்லைவாழ் அந்தணர்களைப் போன்ற தொகையடியார்கள் ஆவார்கள்.
பொய்யடிமை இல்லாத இப்புலவர்களைப் பற்றிச் சிறப்பித்துக் கூறவந்த நம்பியாண்டார் நம்பி, தாம் பாடியருளிய திருத்தொண்டர் திருவந்தாதியில், கடைச்சங்கப் புலவர்களாகிய கபிலர், பரணர், நக்கீரர் முதலிய நாற்பத்தொன்பது புலவர்களையும் பொய்யடிமையில்லாத புலவர் சிறப்பித்துக் கூறுகின்றார்.
முதல் பாடல் விளக்கம்:
செய்யுட்கண் வரும் சொற்களின் அமைவைத் தெளிதலும் சிறந்த நூல்கள் பலவற்றையும் நுணுகி ஆராய்தலும் ஆகிய எல்லாம், மெய்யுணர்வின் பயனாக விளங்கும் செம்பொருளின் அடைவேயாம் எனத் துணிந்து, விளங்கி ஒளிவீசுகின்ற நஞ்சினையுண்ட கழுத்தினையுடைய சிவபெருமானின் மலர் அனைய திருவடிக்கு ஆளானவர்களே, பொய்யடிமையில்லாத புலவர்கள் எனக் குறித்துப்போற்றப் பெற்று விவரிகளாவர்.இவ்வடியார்கள் செய்யுட்களில் காணும் சொற்களுக்கு நன்கு தெளிவாகப் பொருத்தமான பொருள் கொள்வார்கள். செம்மை தரும் பயனுடைய நூல்கள் பல கற்ற இவ்வடியார்கள் கற்றவர்க்குத் தாம் வரப்பாக விளங்குவார்கள்.
2ம் பாடல் விளக்கம்
கலைமேவும் நீலகண்டப் பெருமானின் மலரடிக்கே ஆளான .
சித்தத்தை சிவனார் சேவடிக்கே அர்ப்பணித்த, மெய்யுணர்வு பெற்ற இவ்வடியார்கள், சிவபெருமானை மட்டுமே முக்காலமும் எண்ணினர். மெய்யன்புடன் அரனார்க்கு அடிமை பூண்டு பக்தி நூல்களை ஓதியுணர்ந்து வேத விதிப்படி அறம் வளர்த்து எம்பெருமானையே தொழுது வாழும் பேறு பெற்றனர். இப்புலவர்களுடைய அருமைகளையும், பெருமைகளையும் அளவிடுவது எங்ஙனம்!
பரமனையே உள்ளுருகிப் பாடும் புலமை பெற்ற இப்புலவர்கள் கயிலை மலையில் திருநடனம் புரியும் பெருமானின் திருவடியை அணைந்து வாழும் பேறு பெற்ற பெருமையை யாது சொல்லி அளவிடுவது!.
3ம் பாடல் விளக்கம்:
அத்தன்மையுடைய பொய் அடிமை இல்லாத புலவர்களின் திருவடிகளை எம் தலைமீது கொண்டு வணங்கி, இந்நிலவுலகினைத் தாங்கி அரசளித்த வெண்கொற்றக் குடையை உடைய சோழ மரபினர் செய்த தவப்பயனைப் போன்றவரும், மேலோங்கி வளர்கின்ற தொண்டின் உண்மைத் தன்மையினை உணர்ந்த செயலைச் செய்தவரும், கழல் அணிந்த வெற்றியையுடையவரும் ஆகிய புகழ்ச் சோழ நாயனாரின் திருத்தொண்டைச் சொல்லப் புகுகின்றோம்.
பொய்யடிமையில்லாத புலவர் புராணம் முற்றிற்று.
மேற்கோள்கள்:
சுந்தரமூர்த்தி நாயனார் தனது திருத்தொண்டத் தொகையில் 7வது பாடலில் பின்வருமாறு வரிசைப்படுத்தி உள்ளார்
பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்
2.சேக்கிழார் பெருமான் தனது பெரியபுராணத்தின் பாடல் எண் 3939 முதல் 3941 வரை 3 பாடல்கள் பாடியுள்ளார்
குறிப்பு.
(தனியடியார்-ஒருவரை மற்றும் குறிப்பிட்டு கூறுவது
தொகையடியார்-(தொகை- தொகுத்துக் கூறுவது) ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை
சேர்த்துப் பொதுவாகக் கூறுவது ஆகும்)
திருச்சிற்றம்பலம்
சிவார்ப்பணம்