ஸ்ரீரங்கம், திருப்பதி கோயில் பகல் பத்து, இராப்பத்து நாட்கள் விபரம் இதோ!
மார்கழி மாதம் என்றாலே விழாக்களின் மாதம் எனலாம். மாதங்களில் மிக புனிதமானதாக ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மாதங்கள் பார்க்கப்படுகின்றன.
அதனால் இந்த மாதங்களில் திருமணம் உள்ளிட்ட பெரிய சுப நிகழ்வுகள் வைக்காமல் இறைவனை ஆராதிப்பதற்கான மாதமாக போற்றப்படுகிறது. அதிலும் குறிப்பாக மார்கழி மாதத்தில் வரக்கூடிய வைகுண்ட ஏகாதசி மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகின்றது. அதனால் தான் மாதங்களில் நான் மார்கழி என ஜகத்குருவாம் ஸ்ரீ கிருஷ்ண பகவானின் வாக்கு. வைகுண்ட ஏகாதசி 2020 என்றால் என்ன?
ஸ்ரீரங்கம், திருப்பதி கோயில் பகல் பத்து, இராப்பத்து நாட்கள் விபரங்களை இங்கு விரிவாக பார்ப்போம்…
இந்து சமயத்தில் எம்பெருமான் மகா விஷ்ணு இருக்கக்கூடிய இடம் வைகுண்டம் என்பார்கள்.
இந்த வைகுண்ட ஏகாதசி அற்புத நாள் தொடங்கி இராபத்து முழுவதும் 10 நாட்கள் பெருமாள் கோயிலில் உள்ள வைகுண்ட வாசல் திறந்திருக்கும். வைகுண்ட வாசல் வழியாக சென்று எம்பெருமானை தரிசனம் செய்தால், நமக்கு முக்தியும், வைகுண்டத்தில் எம்பெருமானின் சேவையை செய்யும் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மார்கழி மாதத்தில் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வரக்கூடிய வைகுண்ட ஏகாதசி நிகழ்வு ஒவ்வொரு திருமால் திருக்கோயில்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். வைகுண்ட ஏகாதசியின் சிறப்புகள் என்ன, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு மற்றும் பகல் பத்து, இராப் பத்து ஆகிய தினங்கள் நடக்கும் விபரத்தை தேதி வாரியாக பார்ப்போம்.
மார்கழி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை பதினொன்றாம் நால் ‘வைகுண்ட ஏகாதசி’ என இந்துக்களால் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்திற்கு முன் 10 நாட்கள் பகல் பத்து நாட்கள் என பகலில் பெருமாள் வீதி உலா நிகழ்வு நடக்கும்.
அதே போன்று ‘வைகுண்ட ஏகாதசி’ தினம் தொடங்கி அடுத்து வரும் பத்து நாட்கள் இராப்பத்து என்ற நிகழ்வு நடக்கும். இந்த நாட்களில் இரவில் எம்பெருமான் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருளுவார்.
வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருந்து முன்னிரவு முதல் உறங்காமல், திருமாலின் பக்தி பாடலை பாடுவதும், புராண கதைகளைப் படிப்பதும், பஜனை பாடுதல், மகா விஷ்ணுவிற்கு உகந்த மந்திரங்களை உச்சரிப்பது, சொற்பொழிவு கேட்டல் ஆகிய பக்தி பரவசமூட்டும் செயல்களை செய்யலாம்.
இந்த அற்புத தினத்தில் விடியற்காலையில் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று, கோயிலுக்கு வட கிழக்கு பகுதியில் உள்ள சொர்க்க வாசல் வழியாக கோயிலுக்குள் நுழைந்து இறைவனை வழிபட்டு வருவது வழக்கம்.
வைகுண்ட ஏகாதிக்கு சிறப்பு வாய்ந்த 108 திவ்ய தேசங்களில் முதலாவதான ஸ்ரீரங்கம் உள்ளிட்ட மற்ற திவ்ய தேச கோயில்களிலும், சிறிய பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி ஸ்ரீ ரங்கம், திருப்பதி உள்ளிட்ட பிரபலமான வைணவ திருத்தலங்களில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்….
ஓம் நமோ நாராயணா நமஹா