கார்த்திகை சோம வாரத்தில் பகல் உணவு தவிர்த்து இரவில் மட்டும் உணவு உட்கொண்டு சிவனை பூஜிப்பவர்களுடைய பாவம் தீயிலிட்ட பஞ்சு போல் ஆகிறது. சிவனை அபிஷேகித்து அர்ச்சனை செய்வோர் தம்மோடு தம் முன்னோர்களும் பாவ விமோசனம் பெற வழிசெய்கிறார்கள் என்கிறது கார்த்திகை மகாத்மியம்.
கார்த்திகை மாத திங்கட்கிழமை விரதம் அனுஷ்டிப்பதால் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். கார்த்திகை சோம வார விரதம் அனுஷ்டித்தால் அந்த சிவனுக்கே பிடித்தமானவராகி விடுவோம். இந்த விரதம் அனுஷ்டித்த சந்திரன் தனது நோய் நீங்கி சிவனின் தலையிலேயே இடம் பெறும் பேறு பெற்றுள்ளார். சோமவார விரதம் அனுஷ்டித்தால் நோய்கள் நீங்கும், உடல் ஆரோக்கியமடையும்.
காஷ்மீர் தேசத்தில் ஓர் அந்தணர் இருந்தார். அவர் தன் மகளுக்கு ஒரு மறையவனை மணமுடித்தார். திருமணமான பின்னும் அந்தப் பெண் ஆட்டம் பாட்டம் அலங்காரம் என்று உலக மாயையில் உழன்றாள் கணவனோடு சண்டையிட்டாள். தீய வழிக்குச் சென்றாள். இறுதியில் கணவனையே கொன்றாள்.
நாளடைவில் அவளது அங்கங்கள் தளர்ந்தன அழகு குறைந்து.நோய்வாய்ப்ப்பட்டாள். இறுதியில் உயிர் விட்டாள். நரகம் சென்று துன்பப் பட்டாள். பல்வேறு பிறவிகளை எடுத்து அவள் நாயாகப் பிறந்தாள். அந்த நிலையில் அவள் ஓர் அந்தணன் வீட்டின் வாயிலில் கிடந்த உணவை சாப்பிட்டாள்.
அது கார்த்திகை சோமவார பூஜை செய்து அந்தணன் இட்ட பலி. எனவே அதனை உண்ட நாய்க்கு முன்ஜென்ம நினைவுகள் வந்தன. பேசத் தொடங்கிற்று. அதைப் பார்த்த அந்தணன் வியந்தான். நாயோடு பேச்சுக் கொடுத்தான் எனக்கு பூர்வஜென்ம நினைவு வரக் காரணம் என்ன என்று அந்த நாய் அந்தணனிடம் கேட்டது. அதற்கு அவன், சோமவார பூஜை பலியை உண்டாய் எனவே உனக்கு ஞானம் வந்தது என்றான்.
ஞானம் வந்த நாய் சுவாமி நீங்கள்தான் என்னைக் கரையேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. கருணை மிகுந்த அவன் சோமவார பூஜை பலனை நாய்க்குத் தந்தான். பலனைப் பெற்ற நாய் பேரழகி உருவம் எடுத்து சொர்க்கம் லோகம் சென்றது என்கிறது கார்த்திகை மகாத்மியம்.