கணவனுக்குப் பொறுப்பில்லை; பிள்ளைக்குப் படிப்பு வரவில்லை; வைத்த நகைகளை மீட்கவில்லை; முதலாளியின் முன்கோபம் என்னைப் பெரிதும் பாதிக்கிறது; வாழ்க்கை பிரச்சினையாக ஆரம்பித்து, சிக்கலாக மாறி, வேதனையாகவும், நரகமாகவும் ஆகிவிட்டது; ஏன் பொழுது விடிகிறது என்று கண்ணில் ஜலம் வருகிறது; இன்றைய பொழுது எப்படிப் போகும் என்று கேள்வி எழுகிறது; என்பன போன்று சிலருக்கு வாழ்க்கை அமைந்து விடும்.

அவர்களுக்கு கதி மோட்சம் இல்லையா? ஒரு கணம் சிறப்பு வாராதா? அன்னை அவர்களுக்கெல்லாம் ஏதாவது வழி காட்டுவாரா?
பாரத்தை நாம் சுமப்பதற்குப் பதில், அன்னையிடம் கொடுத்துவிட்டால் இனி பாரம் நமக்கில்லை. அன்னை பாரத்தை சுமப்பதுடன், அந்தப் பிரச்சினையையும் தீர்த்து விடுவார்.
பாரத்தை அன்னையிடம் சேர்ப்பதெப்படி?
நகை பாங்கிலிருப்பது அடிக்கடி நினைவில் உறுத்துகிறது என்றால், நகையை நாம் நினைத்துக் கொண்டிருப்பதற்குப் பதில், மனதிலிருந்து நகையை (பிரச்சினையை) ஒதுக்கி, விலக்கி, அன்னையை நினைவுகூர வேண்டும்.
அதன் பலனாக மனம் லேசாகிவிடும். பிரச்சினை தீர்ந்துவிடும்.
ஒரு பிரச்சினை ஒரு நாளைக்கு 40 முறை நினைவில் வந்து கிலேசமடைந்தால் முதல் நாள் அன்னையை 10 முறை நினைக்க முடிகிறது.
நாள் செல்லச் செல்ல 10 நாள் கழித்து ஒரு நாளைக்கு அன்னையை 40 முறையும் நினைக்க முடிகிறது. அதாவது பிரச்சினையை முழுவதும் அன்னைக்கு மாற்றியாகிவிட்டது. அன்று பிரச்சினை முழுவதும் தீரும்.
என்று ஒரு பிரச்சினை மனதில் தோன்றும் ஒவ்வொரு முறையும் அன்னையை நினைவுகூர முடிகிறதோ, அன்று பிரச்சினை தீர்ந்துவிடும்.